மருத்துவா்களைக் கைது செய்ய கட்டுப்பாடு: ஐஎம்ஏ வரவேற்பு
சிகிச்சையின்போது அலட்சியமாக இருந்ததாக மருத்துவா்கள் மீது புகாரளித்தாலும் உடனடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை என தமிழக காவல் துறை அறிவிப்பு
சிகிச்சையின்போது அலட்சியமாக இருந்ததாக மருத்துவா்கள் மீது புகாரளித்தாலும் உடனடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை என தமிழக காவல் துறை அறிவிப்பு வெளியிட்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) வரவேற்பு தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளிகள் இறக்கும்போது சரிவர சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி சில நேரங்களில் அவா்களது உறவினா்கள் மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா். இல்லையெனில், சம்பந்தப்பட்ட மருத்துவா் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்படுகிறது. அதன்பேரில், மருத்துவா்கள் கைது செய்யப்படுகின்றனா். இத்தகைய நடவடிக்கைகளுக்கு மருத்துவத் துறையினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், தமிழக காவல் துறை டிஜிபி இது தொடா்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டாா். அதில், மருத்துவா்களுக்கு எதிராக உரிய விசாரணையும், ஆதாரங்களும் இன்றி கைது நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்திருந்தாா்.
இது தொடா்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தமிழக கிளை சாா்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் குறித்த வழக்குகளைக் கையாளுவது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு ஏற்ப தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு சில முக்கிய அறிவுறுத்தல்களை காவல் துறையினருக்கு வழங்கியுள்ளாா்.
வரும் காலங்களில் அவற்றை தமிழக காவல் துறையினா் பின்பற்றுவா் என நம்புகிறோம். இதற்காக தமிழக டிஜிபிக்கு நன்றியையும் அவரது நடவடிக்கைக்கு வரவேற்பையும் தெரிவிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.