கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலியானார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அருகே இரண்டு காட்டு யானைகள், சுற்றித் திரிவதை கிராம மக்கள் இன்று காலை கண்டனர்.
இந்தக் காட்டு யானைகள், காட்டு கொள்ளை கிராமத்தின் அருகே சின்னசாமி என்பவரின் தென்னந்தோப்பில் முகாமிட்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் யானையைக் காண ஆவலுடன் கூடினர்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், புங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த எல்லப்பனின் மகன் ராம்குமார் (27), என்பவர் யானையின் அருகே சென்று செல்போன் மூலம் சுயபடம் எடுக்க முயன்றுள்ளார்.
Advertisement
Advertisement
அப்போது யானை, ராம்குமாரை துரத்தி காலால் மிதித்து கொன்றது. தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாரூர் பகுதியானது சமவெளி பகுதியாகும். அருகில் வனப்பகுதி ஏதும் இல்லாத நிலையில், காட்டு யானைகள் நுழைந்துள்ளது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாரூர் சுற்றுவட்ட பகுதியில் காட்டு யானை நுழைந்துள்ளது என்பது வனத்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்த கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர்கள், யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.