பென்னாகரம்: பென்னாகரம் அருகே பட்டாசு தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு கூலித்தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமாக தருமபுரி அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை பட்டாசு தயாரிப்பு பணியாளர்கள் வேலைக்கு வந்தபோது பட்டாசுக்கு தேவையான எரிபொருளை நிரப்பும்போது ஏற்பட்ட தீப்பற்றி குடோன் வெடித்து சிதறியது. இதில் பணிபுரிந்து வந்த மேச்சேரி வெள்ளாறு பகுதியைச் சேர்ந்த கணபதி மனைவி பழனியம்மாள் ( 50), நாகரசம்பட்டி சேர்ந்த காவிரி மனைவி முனியம்மாள் (60) ஆகியோர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பென்னாகரம் காவல்துறை கண்காணிப்பாளர் இமயவரம்பன், பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் வேலுத்தேவன், பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் சிதறிய நிலையில் கிடந்த இரண்டு தொழிலாளர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் ஒருவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜிகே மணி நேரில் சென்று விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையினை பார்வையிட்டு விபத்துக்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.