கள்ளச்சாராயம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனா்.
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 11 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் 34 பேரையும் தனித்தனியாக சந்தித்து நலம் விசாரித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும். கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்படுவார்கள். சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை ௭டுக்கப்படும்.
சாராயத்தில் மெத்தனாலை பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்' என்று பேசினார்.
இதையும் படிக்க | கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்