மணிப்பூர் கலவரங்கள் பற்றி பிரதமர் மோடி இதுவரை ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், திருவள்ளுவர் அரசனுக்குத் தேவையான நான்கு குணங்களில் ஒன்றாகச் 'செங்கோலை' வைத்தார் - குறள் 390
(செங்கோல்: செங்கோன்மை)
மற்று மூன்று குணங்கள்: கொடை, இரக்கம் மற்றும் ஏழை, எளிய மக்களைக் காத்தல்
குறள் 546 இல்
அரசனைத் திருவள்ளுவர் எச்சரிக்கிறார்:
'வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடாதெனின்'
(கோடாத கோல்: வளையாத செங்கோல்)
2023 ஆண்டில் தேவையான பாடத்தை அன்றே வள்ளுவர் சொன்னார்
மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் வெடித்து 3 வாரங்கள் ஓடிவிட்டன. 75 பேர் மடிந்திருக்கிறார்கள்
ஆனால் இந்த நாள் வரை பிரதமர் மணிப்பூர் கலவரங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை
மணிப்பூர் மக்கள் வன்முறையைத் தவிர்த்து அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுக்கவில்லை
அவருடைய கரங்களில் உவமையான 'செங்கோல்' இருக்கிறது என்று யாராவது அவருக்கு நினைவு படுத்தவேண்டுமோ? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.