முகப்பு
தமிழ்நாடு

பருவமழை தொடங்கும் வரை சென்னை எப்படி இருக்கும்?

பருவமழை தொடங்கும் வரை சென்னை எப்படி இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:17 PM
பருவமழை
பகிர்:


சென்னை: கடந்த ஒரு சில மாதங்களாக பகலில் வாட்டி வதைக்கும் வெயிலும், அவ்வப்போது இரவில் பலத்த மழையும் என சென்னை திண்டாடி வந்த நிலையில், பருவமழை தொடங்கும் வரை சென்னை எப்படி இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

வெப்பச் சலனம் காரணமாகவே தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும், இயற்கை, மழை அளவை சமன் செய்துவிட்டதாகவும், கடந்த வார இறுதி மற்றும் இந்த வார துவக்கத்தில் கன்னியாகுமரியில் கனமழை பெய்து, தென்மேற்குப் பருவமழையின்போது காய்ந்திருந்த குளம், அணைகளில் நீரை நிரப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

வடகிழக்குப் பருவமழை மெல்லத் தொடங்கும். அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் எங்கு மழை பெய்தாலும், அது வடகிழக்குப் பருவமழையின் கணக்கில்தான் சேரும். ஒருவேளை பருவமழை தொடங்குவதில் காலதாமதம் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுபோல, அடுத்த சில நாள்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் அக்டோபர் இரண்டாம் வாரத்துக்குப் பிறகு வெப்பச் சலன மழை ஆங்காங்கே பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 25ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான சாதனமான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வு நிபுணர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் - செப்டம்பர் மாதங்களில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை அளவானது இயல்பான அளவை விட 55 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை கூடுதலாக பெய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

முழு கட்டுரையைப் படிக்க →