முகப்பு
தமிழ்நாடு

நாமக்கல்லில் சிலிண்டர் வெடித்து விபத்து: இருவர் பலி

நாமக்கல்லில், வீட்டில் சிலிண்டர் வெடித்து இரண்டு முதியவர்கள் வியாழக்கிழமை காலை பலியாகி உள்ளனர்.

Updated On : 5 அக்டோபர், 2023 at 5:16 PM
பகிர்:

நாமக்கல்: நாமக்கல்லில், வீட்டில் சிலிண்டர் வெடித்து இரண்டு முதியவர்கள் வியாழக்கிழமை காலை பலியாகி உள்ளனர்.

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் அக்ரஹார வீதியில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில், சமையல் செய்த போது திடீரென சிலிண்டர் பழுதானது. இதனைச் சரி செய்வதற்காக எரிவாயு நிறுவன ஊழியரை வீட்டிலிருந்தோர் அழைத்ததன் பேரில் அங்கு வந்தார்.

பழுதை சரிபார்த்தபோது திடீரென சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து வந்த நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, வீட்டினுள் படுகாயங்களுடன் கிடந்த ஒருவரை மீட்டனர். 

Advertisement

இதில் நிகழ்விடத்திலேயே இரண்டு முதியவர்கள் பலியாகினர். அவர்களுடைய உடல்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் விசாரணை செய்தனர்.

இந்த தீ விபத்தில் பலியானவர்கள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் பார்த்தசாரதி(68) என்பதும், தற்போது ஆஞ்சனேயர் கோயில் அருகில் வசிப்பதும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த தனலட்சுமி(62) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் எரிவாயு நிறுவன ஊழியரான நாமக்கல்லைச் சேர்ந்த அருண்(25) பலத்த தீக்காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.