திருவொற்றியூரில் திமுக பிரமுகர் படுகொலை!
திருவொற்றியூரை சேர்ந்த திமுக பிரமுகரும், ஒப்பந்ததாரருமான காமராஜ்(33) என்பவரை இன்று வியாழக்கிழமை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
திருவொற்றியூர்: திருவொற்றியூரை சேர்ந்த திமுக பிரமுகரும், ஒப்பந்ததாரருமான காமராஜ்(33) என்பவரை இன்று வியாழக்கிழமை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். திமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார். இவரது மகன் காமராஜ், மாநகராட்சி மற்றும் அரசு ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர், வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் அருகில் உள்ள சின்ன ஏர்ணாவூர், பூம்புகார் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் நுழைந்தபோது சுமார் ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென அவர் மீது சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காமராஜ் சத்தமிட்டதில் அங்கிருந்து கொலையாளிகள் தப்பிச் சென்றனர். காமராஜை மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அருகில் வசிப்போர் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த எண்ணூர் காவல் நிலைய போலீசார் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.