வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று (செப்.12) மாலை நேர்ந்த விபத்தில் ஒருவர் தலை துண்டான நிலையில் உயிரிழந்தார். காயமடைந்த பெண் உள்ளிட்ட இருவர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயக்காரன்புலம்- 3 ஆம் சேர்த்தி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 4 இடங்களில் நிறுவப்பட்டுள்ள கட்டடங்களில் வாணம் உள்ளிட்ட வெடிகள் தயாரிக்கப்படும்.
இந்த நிலையில் மாலை 4.45 மணியளவில் தொழிற்சாலையில் மருந்துகள் இருப்பு வைக்கும் கட்டத்தில் விபத்து ஏற்பட்டது கட்டடம் வெடித்து சிதறியது. இதில் கடையின் உரிமையாளர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவர் தலை துண்டான நிலையில் உயிரிழந்தார்.
சிவகாசியை சேர்ந்த கண்ணன்(37), ஆயக்காரன்புலம் மேரி சித்ரா (35) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து வேதாரண்யம் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாய்மேடு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.