பண்ருட்டி பணிமனையில் தீ விபத்து: 4 பேருந்துகள் சேதம்!
பண்ருட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேருந்துகள் எரிந்து சேதமடைந்தது.
நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேருந்துகள் எரிந்து சேதமடைந்தது.
பண்ருட்டி, நெய்வேலி சாலையில் அரசுப் போக்குவரத்துக் கழக (விழுப்புரம் கோட்டம்) பணிமனை உள்ளது. இங்கு பேருந்துகள் பராமரிக்கப்பட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகிறது.
இந்த பணிமனையில் கூண்டு கட்டும் பிரிவு உள்ளது. இங்கு பழைய பேருந்துகளின் மேற்கூரையை அகற்றும் பணி ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை பணி முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் வெல்டிங்கில் சிதறிய தீப்பொறி அங்கு வைக்கப்பட்டிருந்த பிளேவுட் மீது பட்டு கனிந்து இரவு 11.30 மணி அளவில் கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீ அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் பரவி எரிந்தது.
தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஒரு பேருந்து முற்றிலும் சேதமடைந்தது. மேலும் 3 பேருந்துகளின் முன் பகுதி எரிந்து சேதமடைந்தது.
இதையும் படிக்க | ஏசி இயங்காததால் ரயிலை நிறுத்திய பயணிகள்: திருப்பூரில் பரபரப்பு
இந்த தீ விபத்து குறித்து காவல்துறை மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.