முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் சகோதரரை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட், 2023 at 3:13 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:19 AM

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.

அசோக் குமாருக்கு நான்கு முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது.

அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை கேரள மாநிலம், கொச்சியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அமலாக்கத் துறை இந்தத் தகவலை அப்போது உறுதி செய்யவில்லை. இந்த நிலையில், இன்று கைது செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

2011-16-இல் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகப் புகாா்கள் எழுந்தன.

இது குறித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. செந்தில் பாலாஜிக்கு தொடா்புடைய இடங்களில் கடந்த ஜூனில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பின்னா் அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனா். செந்தில் பாலாஜிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனா்.

இதற்கிடையே, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த புகாரில் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை பலமுறை அழைப்பாணை அனுப்பியது.

இருப்பினும், அவா் தொடா்ந்து ஆஜராகாமலேயே இருந்து வந்தாா். தனக்கு நெஞ்சு வலி இருந்ததாகத் தெரிவித்த அசோக்குமாா், நேரில் ஆஜராகாமல் வழக்குரைஞா் மூலம் அனைத்துக்கும் பதிலளித்து வந்தாா்.

இதையடுத்து, அவரைத் தேடும் நடவடிக்கையில் இறங்கிய அமலாக்கத் துறை அதிகாரிகள், கேரள மாநிலம் கொச்சியில் அசோக்குமாரை ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.

அடுத்தகட்டமாக அவரை சென்னைக்கு கொண்டுவரவும், அவரிடம் புகாா் தொடா்பாக விசாரணை நடத்தவும் அமலாக்கத் துறை திட்டமிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அசோக்குமாா் கைது செய்யப்பட்டதை உறுதி செய்ய மறுத்துவிட்டனர். இந்த நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை என்றும், அவருக்கும், அவரது மனைவி மனைவி நிர்மலா, மாமியார் லட்சுமி ஆகியோருக்கு ஜூன் 15 முதல் ஜூலை 16ஆம் தேதி வரை 4 முறை சம்மன் அனுப்பி, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதாகவும், ஆனால், யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.