முகப்பு
தமிழ்நாடு

பூலான்வலசில் சேவல் சண்டை நடைபெறாததால் சண்டை ஆர்வலர்கள் அதிர்ச்சி

பூலான்வலசில் ஆண்டுதோறும் நடைபெறும் சேவல் சண்டை இந்த ஆண்டு நடைபெறாததால் சேவல் சண்டை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Updated On : 14 ஜனவரி, 2023 at 3:08 PM
சண்டை நடைபெறாததால் சொந்த ஊருக்கு புறப்பட்ட சண்டை ஆர்வலர்கள்.
பகிர்:

பூலான்வலசில் ஆண்டுதோறும் நடைபெறும் சேவல் சண்டை இந்த ஆண்டு நடைபெறாததால் சேவல் சண்டை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பூலான்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  ஆண்டுதோறும் சேவல் சண்டை நடத்துவது வழக்கம். சேவல் சண்டையின்போது விதிமுறை மீறி சேவல் கால்களில் கட்டப்படும் கத்திகளால் சண்டையின் போது சேவல்  மட்டும் இன்றி சேவல் சண்டை நடத்துவோரும் கத்திபட்டு இறப்பதால் நிகழாண்டு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது என கரூர் மாவட்ட பாமக செயலாளர் பிரேம்நாத் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத்தொடர்ந்தார்.

இதையடுத்து நீதிமன்றம் வரும் ஜன.25 வரை சேவல் சண்டை நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.  இருப்பினும் பூலான்வலசில் சண்டை நடத்தும் குழுவினர் சார்பில் சேவல் சண்டை நடத்தும் இடத்தில்  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

வழக்கம்போல ஜன.14-ம்தேதி சண்டை நடைபெறும் என ஆவலுடன் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர்,  ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சேவல் சண்டையில் ஈடுபடும் நபர்கள் தங்களது சேவல்களுடன் சண்டை நடைபெறும் பூலான்வலசு கிராமத்திற்கு அதிகாலை முதலே கார்களில் வரத்தொடங்கினர். 

இருப்பினும் பூலான்வலசு சோதனை சாவடியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் சண்டை நடைபெறும் இடத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.  இதனால் வந்தவர்கள் அப்படியே திரும்பிச் சென்றனர். மேலும் சண்டை  அரைமணி நேரத்தில் தொடங்கிவிடும் என கூறியதாகத் தகவல் பரவியதால் சிலர் சில மணி நேரம் காத்திருந்துவிட்டு பிறகு புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.