முகப்பு
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு அண்ணாமலை பாராட்டு!

சென்னையில் பெய்து வரும் மழையில் இரவு, பகலாக மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருவது பாரட்டுக்குரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:27 AM
வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபாடு செய்த பின்னர் பக்தர்களுடன் அண்ணாமலை செல்பி எடுத்துக்கொண்டபோது..
பகிர்:

சென்னையில் பெய்து வரும் மழையில் இரவு, பகலாக மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருவது பாரட்டுக்குரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 'என் மண், என் மக்கள்'  நடைப்பயணம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று இரவு (புதன்கிழமை) வேதாரண்யத்தில் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கீழ்வேளூர், நாகை பகுதிகளில் அவர் இன்று நடைப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது.

இந்நிலையில் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் டிசம்பர் 5 ஆம் தேதி வரை தனது நடைப்பயணத்தை ரத்து செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். 

இதனையடுத்து  வேளாங்கண்ணியில் தங்கியிருந்த அவர், உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று வழிபாடு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கனமழை மழை மற்றும் புயல் அறிவிப்பு காரணமாக டிசம்ர் 5 ஆம் தேதி வரை நடைப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி கடலூரிலிருந்து நடைப்பயணத்தை துவங்க உள்ளேன். 

சென்னை மழையில் மாநகராட்சியின் கீழ்நிலை ஊழியர்கள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை கடுமையாக உழைக்கின்றனர். இரவு நேரத்தில் பிரச்னை என்றாலும் மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் பணியாற்றுகின்றனர். சிறிய மழைக்கு தண்ணீர் தேங்குவது இல்லை, கனமழைக்கு தேங்கும் தண்ணீர் சில மணி நேரத்தில் வடிய வைக்கப்படுகிறது. மாநகராட்சி ஊழியர்களின் பணி பாராட்டுக்குரியது.

திமுக ஆட்சிக்கு 30 மாத காலம் இருக்கிறது. அதற்குள் மழைநீர் தேங்கும் பிரச்னையை முழுவதுமாக சரி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் எனக்கு அரசியல் செய்ய விரும்பவில்லை. 

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க தமிழக முதல்வர் மட்டுமல்ல, நானும் கடிதம் எழுதி வருகிறேன். கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்கள் பிரச்னை தீரும். இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பிஆர்எஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருடன் நானும் தெலங்கானாவில் பிரசாரம் செய்துள்ளேன். மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கூறினார். 

பின்னர் வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரியமான கோரக்க சித்தர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டார். அங்கு தியானக் கூடத்தில் தியானத்தில் ஈடுபட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.