திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மூலம், கோடை வெப்பம் அதிகரித்துவரும் நிலையில் யானைகள் வெப்பத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யானைகள் நடமாட்டம் அதிகமிருக்கும் வனப்பகுதிகளில் கோடைக்காலங்களில் நீர்நிலைகள் வற்றிவிடுவதால் யானைகள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் ஊருக்குள் வருவது அதிகரிப்பது வழக்கம்.
இந்த நிலையில்தான், திருச்சியில் உள்ள யானைகள் முகாமில், ஆங்காங்கே, யானைகள் மீது தண்ணீர் விழும் வகையில், ஷவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், குழிகள் ஏற்படுத்தப்பட்டு சேறு இருக்குமாறும் அதில் யானைகள் சேற்றுக்குளியல் போட வசதியும் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தொட்டிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரி கிருத்திகா பேசுகையில், வனத்துறை மூலம், ஆண்டுதோறும் யானைகள், கோடை வெப்பத்திலிருந்து சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இங்குள்ள யானைகள் முகாமில் 11 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. உரிமம் இல்லாமல் யானைகள் வைத்திருப்பவர்கள் அல்லது சரியாக பராமரிக்கப்படாத உரிமையாளர்களிடமிருந்து யானைகள் பறிமுதல் செய்யப்பட்டு இங்கு அழைத்து வரப்படும்.
இங்குள்ள யானைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும். தொடர்ந்து கால்நடை மருத்துவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்கிறார்.