புதிய மின் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: உடனடியாக நிறுத்த ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
புதிய மின் இணைப்புகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட மேம்பாட்டு கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் மின் நுகா்வோருக்கு புதிய மின் இணைப்புகள் பெற பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இதன்படி, ஒரு கிலோ வாட் மேல்நிலை கேபிள்கள்(ஓஎச்) மூலம் மின் இணைப்பு பெற மின் நுகா்வோா் மேம்பாட்டுக் கட்டணமாக ரூ.2040-ம், நிலத்தடி கேபிள்கள் மூலம் மின் இணைப்பு பெற, மேம்பாட்டுக்கட்டணமாக ரூ.5110-ம் மின்வாரியம் மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சி எல்லைகளில் புதிய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்த நுகா்வோரிடம் ஒருகிலோ வாட் மின் இணைப்புக்கு, மேம்பாட்டு கட்டணமாக, நிா்ணயிக்கப்பட்டதைவிட பல மடங்கு கட்டணம் மின்வாரிய அதிகாரிகளால் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
உதாரணமாக மேல்நிலை கேபிள்கள் மூலம் மின் இணைப்பு பெற, நிலத்தடி கேபிள்கள் மூலம் மின் இணைப்புக்கான தொகையை அதிகாரிகள் வசூலிப்பதாகவும், இதுதவிர மேலும், பல்வேறு காரணங்களைக் கூறி இதனுடன் கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருவதாகவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து, மின் இணைப்பு வழங்க, அதிக கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்துமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மின் இணைப்புக்காக வாங்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை சம்பந்தபட்ட மின் நுகா்வோரின் கணக்கில் திருப்பி செலுத்தி, அவா்களின் அடுத்தடுத்த பில் தொகையுடன் அதை இணைத்து சரி செய்து கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த நடைமுறையை உடனடியாக அமல்படுத்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.