தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், திண்டுக்கல், தேனி மக்களவைத் தொகுதி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா கூட்டணி மக்களுக்கான சாதனைகளை செய்யக்கூடிய நம்பகமான கூட்டணி, திமுக கூறிய அனைத்தையும் நிறைவேற்றும் காலம் கனிந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, எக்காரணத்தை கொண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறும்.
இத்தனை நாள்களாக வெளிநாட்டில் டூர் அடித்த பிரதமர், தேர்தலால் உள்நாட்டில் டூர் அடிக்கிறார். திராவிட கோட்டமாக உள்ள தி.நகரில் பிரதமர் ரோடு ஷோ நடத்தினால் எடுபடுமா?
சென்னையில் மோடி நடத்திய ரோடு ஷோ ஃப்ளாப் ஷோ, ஊழல் செய்தவர்களை பாஜகவில் சேர்த்துவிட்டு ஊழலைப் பற்றி பிரதமர் பேசலாமா?
அதிமுகவை அழிக்க வெளியில் இருந்து ஆள்கள் வரத் தேவையில்லை. அதிமுகவை அழிக்கும் வேலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் போட்டி போட்டுக்கொண்டு செய்துகொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் தற்போது விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்று தெரிவித்தார்.