மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் ஆக. 5, திங்கள்கிழமை, செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``மத்திய பாஜக அரசு, தமிழகத்துக்கு எந்தெந்த துறைகளில் நிதி குறைவாக கொடுத்துள்ளது என்பதை முதல்வா் வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாராக இருக்கிறாரா?
மத்திய அரசின் திட்டம் செயல்படுத்துவதற்கு மாநில அரசு, ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. ஒத்துழைப்பு இல்லாத மாநில அரசு மெத்தனமாக இருந்த காரணத்தினால் சில திட்டங்களுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிகாருக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் அதிக நிதி கொடுத்ததாக திமுக அரசு கூறுகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஆந்திரத்திற்கு சிறப்பு நிதியை அறிவித்தார்கள்; ஆனால், சொன்னபடியாக நிதி வழங்கப்படவில்லை.
எனவேதான், நிதிநிலை அறிக்கையில் ஆந்திரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானாவைப் பிரிக்கும்போதே, புதிய தலைநகரம் உருவாக்க ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என மத்திய அரசால் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அவா்கள் ரூ. 25 ஆயிரம் கோடி கேட்ட நிலையில், ரூ. 15 ஆயிரம் கோடி தான் கொடுக்கப்பட்டது.
பிகாருக்கு சாலை வசதிக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்துக்கு சாலை, பாதுகாப்பு கட்டமைப்புக்காக ரூ. 1.15 லட்சம் கோடி சிறப்பு நிதியாக மத்திய அரசு வழங்கிய போது, பிகார் மாநிலத்துக்கு வழங்கப்படவில்லை. தற்போது பிகாருக்கு குறைந்த அளவில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இப்போதும்கூட, சேலத்தை தலைநகராகக் கொண்டு, தமிழகத்தை 2 மாநிலங்களாக பிரித்தால் ஒரு மாநிலத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமல்ல, ரூ.20 ஆயிரம் கோடியாகக்கூட நிதியை பெற்று தருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.