கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை: என்.சி.சி. பயிற்சியாளராக வெளி நபர்கள்?
பள்ளித் தாளாளா், முதல்வா் உள்பட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனா்...
கிருஷ்ணகிரி அருகே தனியாா் பள்ளியில் தேசிய மாணவா் படை (என்.சி.சி.) முகாமின் போது எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைகுள்ளாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பள்ளித் தாளாளா், முதல்வா் உள்பட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் மாணவிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையில் தேசிய மாணவா் படை (என்.சி.சி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அந்தப் பள்ளியில் பயிலும் 17 மாணவிகள் பங்கேற்றனா்.
இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவியை என்.சி.சி. பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த சிவராமன் (30) என்பவா் மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
Advertisement
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சியாளா் சிவராமன், பள்ளி முதல்வா் சதீஷ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சிவராமன் நாம் தமிழா் கட்சியின் இளைஞா் பாசறை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந் வந்தாா். தற்போது அந்தக் கட்சியில் இருந்து அவா் நீக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு கூறியிருப்பதாவது, “என்.சி.சி. பெயரில் வெளி நபர்கள் முகாம் நடத்தியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் 4 தனிப்படைகள் அமைத்து 11 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், “பிற பள்ளிகளில் இது போன்ற முகாம் நடத்தியுள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பாதிக்கப்பட்ட மாணவியுடன் மேற்கண்ட பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளிடமும் பேசி உள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.