மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அழைக்காதது ஏன்? என முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி. சங்கரின் இல்லத் திருமண விழாவில், கருணாநிதியைப் பற்றி திமுகவினரைவிடச் சிறப்பாகப் பேசினார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். கருணாநிதியைப் பற்றி அப்படி புகழ்ந்து பேச வேண்டுமென ராஜ்நாத் சிங்கிற்கு அவசியமே இல்லை. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருணாநிதியை எப்படிப் பாராட்டிப் பேசுவார்களோ அப்படிப் பேசினார் ராஜ்நாத் சிங்.
கருணாநிதியைப் பற்றி ராஜ்நாத் சிங் பேசியதைச் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அனைத்துத் தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடும்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அண்ணா, கருணாநிதி பெயரிலான நாணயங்களில் மட்டும்தான் தமிழ் இடம்பெற்றுள்ளது. இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வாய்த்திருக்கிறார்.
கருணாநிதி நாணய வெளியீட்டு விழா திமுக நிகழ்ச்சி அல்ல, மத்திய அரசின் நிகழ்ச்சி. எனவேதான் ராகுல் காந்தியை அழைக்கவில்லை. பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆதரித்தாலும் எதிர்த்தாலும் திமுக எப்போதும் அதன் கொள்கையோடு இருக்கும்.
நம் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறதா? ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம்கூட நடத்த முடியாதவர்கள் கருணாநிதி விழாவைப் பார்த்து கேள்வி கேட்பது ஏன்? மாவட்டச் செயலாளர் கூட்டத்தில்கூட பாஜகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம் என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.