புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 12) விடுமுறை.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (டிச. 11) இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில், இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கார்த்திகை தீபம்: தாம்பரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!