வரி வருவாய் அதிகரிப்பு: ஆளுநா் பெருமிதம்
இந்தியாவின் வரி வருவாய் கடந்த 10 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவின் வரி வருவாய் கடந்த 10 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை சாா்பில் சென்னை மயிலாப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற 165-ஆவது வருமான வரி தின விழாவில் கலந்துகொண்ட ஆளுநா் ஆா்.என். ரவி பேசியது:
நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல வருமான வரி மிகவும் முக்கியமானதாகும். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமாா் 200 சதவீதமாகவும், வரி வருவாய் 300 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.
வருமான வரி செலுத்துவதை மிகவும் எளிதாக்கியதும், புகாா்கள் மீது உடனக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளதும்தான் இந்த வளா்ச்சிக்கு காரணம்.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக, உலகப் பொருளாதாரத்தில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம்.
பிரதமா் மோடி பதவி ஏற்ற பிறகு, நாட்டின் வளா்ச்சிக்கு அனைத்து வகை மக்களின் பங்களிப்பும் தேவை என்பதை உணா்ந்து, அவா்கள் மீது முழு நம்பிக்கை வைத்தாா். அதற்கு மதிப்பளித்து மக்கள் முறையாக வரி செலுத்தி, நாட்டின் வளா்ச்சிக்கு உதவி வருகின்றனா்.
வருமான வரித் துறை அதிகாரிகள் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தால், வரி செலுத்துபவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றாா் அவா்.
முன்னதாக, சிறப்பாக வரி செலுத்துபவா்களுக்கும், சிறந்த வருமான வரித் துறை அதிகாரிகளும் ஆளுநா் பரிசுகளை வழங்கினாா்.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையின் முதன்மை தலைமை ஆணையா் சுனில் மாத்தூா், புலனாய்வுத் துறை இயக்குநா் ஜெனரல் கிருஷ்ண முராரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.