ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் ஒரு வழக்கில் அஞ்சலை கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஞ்சலை மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஞ்சலைக்கு அடுத்த மாதம் 8-ம் தேதி வரை காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 16 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவரை செம்பியம் தனிப்படை போலீஸார் என்கவுன்டர் செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டதாக பிரபல கஞ்சா வியாபாரி அஞ்சலையை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
அஞ்சலையை போலீஸ் காவில் எடுத்து விசாரணை செய்ய தனிப்படை போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று (ஜூலை 25) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் அஞ்சலை ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அஞ்சலை மீது ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றுக்காக அவரை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உள்பட 12 வழக்குகள் அஞ்சலை மீது உள்ளன. அஞ்சலை ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவராக இருந்து உள்ளார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 9 ஆம் தேதி பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் கந்து வட்டி கொடுத்து மிரட்டல், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலை கைது செய்யப்பட நிலையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் அவரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் இதுகுறித்து விசாரணை செய்த நீதிபதி அஞ்சலைக்கு அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.