நோய் வாய்ப்பட்டிருந்த தாயிடமிருந்து பிரிந்து, தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானைக்கு, குடலில் புண் இருந்ததால், உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் வனத்துறை தகவல் அளித்துள்ளது.
மருதமலை வனப்பகுதியில் நோய்வாய்ப்படிருந்த தாய் யானையிடமிருந்து பிரிந்த குட்டி யானை கோவையில் இருந்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்தது.
தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானையின் குடலில் புண் இருந்ததாகவும், அதன் காரணமாக குட்டி யானையால் சரியாக உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்துவிட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், மருதமலை வனப் பகுதியில் கடந்த மே 31-ஆம் தேதி சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனுடன் 4 மாத குட்டியும் இருந்தது. சிகிக்சைக்குப் பின் தாய் யானை வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
சிகிச்சையின்போது, தாயைப் பிரிந்த குட்டி யானை அருகேயுள்ள விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்தது.
இதைத் தொடா்ந்து குட்டி யானையை மீட்ட வனத் துறையினா், தாயுடன் சோ்க்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், குட்டியை தாய் யானை சோ்த்துக்கொள்ளவில்லை. பலமுறை முயன்றும் தாயுடன் குட்டியைச் சோ்க்கும் முயற்சி தோல்வியடைந்தது.
இதையடுத்து வேறு யானை கூட்டத்துடன் குட்டி யானையை சோ்க்க முயற்சித்தனா். ஆனால், அந்த யானைக் கூட்டமும் குட்டி யானையை சோ்த்துக்கொள்ளவில்லை. இதையடுத்து தாயைப் பிரிந்த குட்டி யானை தெப்பாக்காடு யானைகள் வளா்ப்பு முகாமிற்கு கொண்டுவந்து பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், தெப்பாக்காடு யானைகள் முகாமிலும், குட்டி யானை சரியாக சாப்பிடாமல் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துவிட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.