மதுரை விமான நிலையத்திற்கு பல ஆண்டுகளாக சர்வதேச விமான நிலையக் கோரிக்கை வைத்தும் இன்று வரை ஈடேறாத நிலையில், அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக ஜாம்நகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பக்க பதிவில்...
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து.
6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு.
ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4 வது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள் தான் இவர்கள்.
முன்னதாக, ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவையொட்டி, குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு பத்து நாள்கள்(பிப்.25 முதல் மார்ச்.5) வரை சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. நாள் ஒன்றுக்கு 6 விமானங்கள் கையாளும் ஜாம்நகரில் நேற்று மட்டும் 140 விமானங்கள் வந்துள்ளன.