பிரதமர் மோடி வருகை- சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை
பிரதமர் விசிட்: ட்ரோன் பறக்க முழு தடை, சென்னையில் கண்டிப்பு நடவடிக்கை
பிரதமர் மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களையொட்டி சென்னையில் ஏப்.29 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை தமிழகம் வருகிறார். பிற்பகல் 1.15க்கு மகராஷ்டிரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு செல்கிறார். பின்னர் மாலை 3.30 மணிக்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை அவர் பார்வையிடுகிறார்.
அதைத்தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களையொட்டி சென்னையில் ஏப்.29 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி ட்ரோன்களை பறக்கவிட்டால் நடவடிக்கை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். மேலும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நந்தனம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் மோடி தெலங்கானா மாநிலம் புறப்பட்டு செல்கிறார்.
கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி திங்கள்கிழமை தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.