உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை சமூகநீதியையும், நேர்மையையும் கடைபிடித்து நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை சமூகநீதியையும், நேர்மையையும் கடைபிடித்து நிரப்ப வேண்டும்
தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை சமூகநீதியையும், நேர்மையையும் கடைபிடித்து நிரப்ப வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. வரும் 28-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 11 ஆண்டுகளாக ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. அதனால் கல்வித்தரம் சீரழிந்து வரும் நிலையில், அதைத் தடுக்க புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்த தமிழக அரசு, அதற்கான அறிவிக்கையை வெளியிடாதது ஏன்? என்று கேட்டு கடந்த 9-ஆம் தேதி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி.
உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் முறை குறித்து தேர்வர்களிடம் பல்வேறு ஐயங்கள் நிலவுகின்றன.அதேபோல், கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தேர்வு செய்யபட்ட போது இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்பட்டதில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்தன. இது தொடர்பான ஐயங்கள் அனைத்தையும் போக்கும் வகையில், இந்த முறை அத்தகைய தவறுகள் நடக்காத வகையில், உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை மிகவும் நேர்மையாகவும், சமூகநீதியை காக்கும் வகையிலும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.