பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரத்தில் ஏப்.3ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் அண்மையில் நடைபெற்ற பிரதமரின் வாகன பிரசார நிகழ்ச்சியின்போது சாய்பாபா காலனி பகுதியில் பிரதமரை வரவேற்க அதே பகுதியை சோ்ந்த தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியா் அழைத்து வரப்பட்டிருந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த கல்வித் துறை அதிகாரிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டாா். இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அதிகாரிகள் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிா்வாகம் மீது சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், மனு மீது ஏப்.3ம் தேதிக்குள் பதிலளிக்க, சாய்பாபா காலனி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் அதுவரை பள்ளி மீது நடவடிக்கை கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.