முகப்பு
தமிழ்நாடு

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

Updated On : 10 மே, 2024 at 4:54 AM
06.05.2024: Coimbatore: Following HSC result announced. Students arrived Coimbatore Government Arts and Science college for UG admission in Coimbatore
பகிர்:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மே 15ஆம் தேதி முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26 முதல் ஏப். 8- வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இந்நிலையில் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகிறது.

தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படவிருக்கிறது. மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

மாணவ, மாணவிகள் பள்ளிகளில் சமா்ப்பித்து இருந்த உறுதிமொழிப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படுவதாலும் இணையதளங்கள் வாயிலாக தோ்வு முடிவை தெரிந்து கொள்வதாலும் எளிதாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதி ஏற்பட்டுள்ளது.

பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வுக்கு வராத மாணவா்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம் இணைந்து ‘தொடா்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி வகுப்புகள் மே 13-ஆம் தேதி தொடங்கி, துணைத்தோ்வுகள் நடைபெறும் நாள்கள் வரை மாணவா்கள் படித்த பள்ளிகளிலேயே நடத்தப்பட உள்ளன.

இதில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடவாரியான ஆசிரியா் வல்லுநா்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு மற்றும் வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.

தொடா்ந்து மாணவா்களை ஊக்குவித்து துணைத் தோ்வு எழுத அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

எனவே, தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் கவலையடையாமல், உடனடியாக பள்ளிகளில் நடக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று துணைத்தேர்வெழுதி வரும் கல்வியாண்டிலேயே 11ஆம் வகுப்பில் சேரலாம் அல்லது விரும்பிய உயர்கல்வியில் சேரவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள..

தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று அங்கு TN SSLC Result 2024 அல்லது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 2024 என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து வரும் பக்கத்தில், மாணவர்களின் பதிவு எண், பிறந்த தேதி, கேப்சா கோடு ஆகியவற்றை சரியாக உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்தவும்.

நீங்கள் உள்ளிட்ட மாணவரின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தெரியவரும். தேவைப்படின், அந்த தேர்வு முடிவை பதிவிறக்கம் மற்றும் பிரின்ட் எடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →