சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்!
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உத்தரவிட்டார். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார்.
சமீபத்தில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ராதிகா சரத்குமார் குறித்து அவதூறாக பேசியது இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. இதற்கு நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் குஷ்பு தங்களது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ராதிகா சரத் குமார் தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.