குடும்பத் தகராறு: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலை!
சங்ககிரி அருகே குடும்பத்தகராறில் ஆட்டோ ஓட்டுநரின் மனைவி இரு பெண்குழந்தைகளுடன் விஷமருந்தி தற்கொலை கொண்ட சம்பவம் தொடர்பாக சங்ககிரி டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கத்தேரி அருகே உள்ள வினோபாஜி நகரில் குடும்பத்தகராறில் ஆட்டோ ஓட்டுநரின் மனைவி இரு பெண் குழந்தைகளுடன் வீட்டில் வெள்ளிக்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தேவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சங்ககிரி வட்டம், கத்தேரி, புள்ளாகவுண்டம்பட்டி, அருகே உள்ள வினோபாஜிநகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ் மகன் கோகுல் (30). அவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுகமதி (24) இருவரும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களுக்கு சஞ்சனாஸ்ரீ (6), ரிஷ்மிகா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சுகமதி இரு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சென்ற சங்ககிரி உள்கோட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜா, காவல் ஆய்வாளர் ரஜினி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி மூன்று சடலங்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].