பேருந்து நடத்துநர் - காவலர் இடையே சமாதானம்: மோதல் முடிந்தது!
பேருந்து நடத்துநர் - காவலர் இடையே சமாதானமாக பேசிய விடியோ வைரல்.
அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த ஆயுதப் படை காவலர் ஆறுமுகபாண்டியனும், பேருந்து நடத்துநரும் ஒருவருக்கு ஒருவர் பேசி சமாதானம் ஆன விடியோ வெளியாகியிருக்கிறது.
இருவரும் பரஸ்பரம் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு, கட்டிப்பிடித்து சமாதானம் பேசிக்கொண்டனர். சிறிது நேரத்தில் இருவரும் தேநீர் குடித்தபடி பேசி மகிழ்ந்த விடியோ வெளியாகியிருக்கிறது.
அந்த விடியோவில், சீருடையில் இருக்கும் இருவரும், ஒருவருக்கு ஒருவர் பேசி, தங்களுக்குள் சமாதானமாகி, ஆரத் தழுவிக் கொள்கிறார்கள். பிறகு, மோதலை கைவிட்டு நண்பர்களாகிவிடுகிறார்கள்.
ஒரு சில நாள்களுக்கு முன்பு, ஆயுதப்படை காவலா் ஆறுமுகபாண்டியன், நான்குனேரியில் உள்ள தனது நண்பரைச் சந்தித்துவிட்டு, அரசு பேருந்தில் சென்றபோது, டிக்கெட் எடுக்காமல் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இந்த விடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவியது.
இதனால், காவலர்கள் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை சார்பில்அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் போக்குவரத்துத்துறைக்கும் காவல்துறைக்கும் இடையே ஒரு பனிப்போர் உண்டானது. காவலர்கள் பலரும் ஆறுமுகபாண்டியனுக்கு ஆதரவாகவும், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் எதிராகவும் கருத்துகளை பதிவிட்டும் வந்தனர்.
இது பேசுபொருளான நிலையில், ஓட்டுநரும், காவலரும் பேசி சமாதானம் ஆனதோடு, போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று இருவரும் ஒன்றாக சொல்லி சமாதானம் செய்துகொண்டனர்.