ஊத்து தேயிலைத் தோட்டப் பகுதியில் யானைத் தாக்கியதில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துனர் காயம்!
வனப்பகுதியில் போதிய தண்ணீர் இல்லாததால் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
ஊத்து தேயிலைத் தோட்டம் அருகே உலாவிய யானைகள் தாக்கியதில் சிற்றுந்து நடத்துனருக்கு காயம் ஏற்பட்டது.
அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் பணிபுரியும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவில், பாபநாசம் பணிமனையிலிருந்து ஊத்துத் தேயிலைத் தோட்டத்திற்கு அகஸ்தியர் பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜ்குமார் மற்றும் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த நடத்துநர் பாடலிங்கம் இருவரும் சிற்றுந்தை இயக்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
இரவு அங்கு தங்கி சனிக்கிழமை அதிகாலை சிற்றுந்தை இயக்குவதற்காக, அறையிலிருந்து சிற்றுந்தை நோக்கிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், இருட்டில் நின்றிருந்த இரண்டு காட்டு யானைகளைக் கவனிக்காமல் சிற்றுந்தை நோக்கிச் சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு காட்டு யானை இருவரையும் தாக்க வந்துள்ளது. உடனடியாக சுதாரித்த ஓட்டுநர் ராஜ்குமார் சிற்றுந்தின் அடியில் பதுங்கி தப்பித்துள்ளார். சிற்றுந்தில் ஏறித் தப்பிக்க முயன்ற நடத்துநர் பாடலிங்கத்தை ஒரு யானைத் தாக்கியுள்ளது.
உடனடியாக ராஜ்குமார் மற்றும் பாடலிங்கம் இருவரும் போட்ட கூச்சலில் யானைகள் இரண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.
இதையடுத்து ஊத்துப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, சிற்றுந்தை இயக்கி பாபநாசம் பணிமனைக்கு வந்தனர்.
அதிகாலை நேரத்தில் நடத்துநரை காட்டு யானைகள் தாக்கியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாள்களாக வனப்பகுதியில் போதிய தண்ணீர் இல்லாததால் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து தேயிலைத் தோட்டப் பகுதிகளில் பல இடங்களில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் ஊத்துப் பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒன்று ஒரே இடத்தில் இரண்டு நாள்களுக்கும்மேல் நின்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.