எம்ஜிஆர், என்டிஆர்.. இருவரையும் மேற்கோள் காட்டி விஜய் சொன்ன விஷயம்!
”கூத்தாடி என்பது கேவலமான பெயரா? கெட்ட வார்த்தையா?”
திரைத்துறையைச் சார்ந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரன், தெலுங்கு பேசும் மக்களிடம் செல்வாக்கு நிறைந்த தலைவராக வலம் வந்த ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என். டி. ராம ராவ் ஆகிய இரு தலைவர்களையும் மேற்கோள் காட்டி தவெக மாநாட்டில் விஜய் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “’கூத்து’ மண்ணோடும் மக்களுடனும் கலந்த ஒன்று. கூத்தாடி என்ற பெயரால் எம்ஜிஆரும், என்டிஆரும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் கட்சி ஆரம்பித்தபோது, கூத்தாடி என்று அவர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்தார்கள். அவர்களையே அப்படி அழைத்தபோது, நம்மையும் அப்படி விமர்சிக்காமலா இருப்பார்கள்.!
அந்த இரண்டு கூத்தாடிகள்தான், மாநில முதல்வர்களாக மாறி மக்கள் மனதில் இன்றும் நீங்கா புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
’சினிமா’ என்பது வெறும் பொழுதுபோக்கல்ல. தமிழர்களுடைய கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடுதான் சினிமா. பொழுதுபோக்கையும் தாண்டி, சமூக அரசியல் புரட்சிக்கு உதவிய ஆயுதம் ‘சினிமா’.
கூத்தாடி என்பது கேவலமான பெயரா? கெட்ட வார்த்தையா? ஒரு கூத்தாடியின் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவன் நினைப்பதை சாதிக்கும் வரை நெருப்பு போல இருப்பான்.
குறியீடாக மாறிய கூத்தாடியைப் பார்த்தால் மக்கள் கூட்டம் கை தட்டும், கண் கலங்கும். இவர்களும் நம்மைப் போலவே இருக்கிறார்களே, நமக்கான ஒருவனாகவும் இருக்கிறாரே என மக்கள் நினைப்பதே இதற்கு காரணம். மக்களுக்கு அந்த மனிதருடன் ஒருவித பிணைப்பு உண்டாகிறது.
காலப்போக்கில் கூத்துதான் சினிமாவாக மாற்றமடைந்துள்ளது. ஆரம்பத்தில் நான் சினிமாவுக்குள் காலடி எடுத்துவைத்த காலகட்டத்தில், என் மீதும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால் சிறிதும் கலங்கவில்லை. வாய்ப்புக்காக காத்திருந்து உழைப்பால் உயர்ந்துள்ள கூத்தாடிதான் நான்.
உழைப்பு மட்டுமே என்னுடையது. என்னை உயர்த்திப் பிடித்தவர்கள் மக்களாகிய நீங்கள்!
சாதாரண இளைஞனாக இருந்த விஜய் முதலில் ஒரு நடிகனாக மாறினான், தொடர்ந்து வெற்றிபெற்ற நடிகனாக மாறினான், அதனைத்தொடர்ந்து பொறுப்புள்ள மனிதனாகவும் மாறினான்.
பொறுப்புள்ள மனிதன் பொறுப்புள்ள தொண்டனாக மாறினான், பொறுப்புள்ள தொண்டனாக இன்று இருப்பவன் நாளை தலைவனாகவும் ஆவான்!” என்று பேசியுள்ளார்.