அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிறதா? அமித் ஷா - இபிஎஸ் சந்திப்பு!
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார்.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மத்திய உள்துறை அமித் ஷா நேற்று (ஏப். 10) இரவு சென்னை வந்துள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசுவதற்காக அமித் ஷா சென்னை வந்துள்ளார். கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கியுள்ள அவர் இன்று காலை ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துப் பேசிய நிலையில், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷாவின் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகும் என்று கூறப்படுகிறது. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்காகவே அமித் ஷா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க அமித் ஷா இதுவரை நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.
இதையும் படிக்க | தமிழக பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்: அமித் ஷா