கரூர் வேலுச்சாமிபுரத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோக்கி ஆய்வு!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோக்கி ஆய்வு செய்தது பற்றி...
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகளான சோனல்மிஸ்ரா, சுமித்சரண் மேற்பார்வையில் குழு அமைத்தது.
குஜராத் மாநிலத்தின் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிபிஐ விசாரணை குழுவினர் கடந்த ஒரு மாதமாக கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் உள்ளிட்டோர் அடங்கிய மேற்பார்வை குழுவினர், செவ்வாய்க்கிழமை கரூர் வந்தனர்.
சிபிஐ அதிகாரிகளுடன் விசாரணை குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், இன்று கூட்ட நெரிசல் நடந்த வேலுச்சாமிபுரத்துக்கு சென்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தவெகவினர் பிரசாரத்துக்கு அனுமதி கேட்ட உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர், மனோரா கார்னர் உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.