திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி திமுக அரசு மத நல்லிணக்கத்தை சிதைப்பதாக பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே (டிச.4) தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கோயில் முன்பகுதியில் குவிந்தனர்.
காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் நீதிபதியின் உத்தரவின்படி, தீபமேற்ற அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதால், உடனடியாக தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் கூறிய நிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் ஹெச். ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனப் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு, சட்ட நிர்ணயங்களுக்கு முற்றிலும் விரோதமான அரசாக தன்னை நிரூபித்துள்ள ஸ்டாலினின் திமுக அரசின் ஏவல்துறை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறதா இந்த முதல்வரின் அரசு? உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் அளித்த உத்தரவுக்குப் பிறகும், திமுக அரசு இயந்திரத்தை பயன்படுத்தி இப்படி அடாவடித்தனத்தை கையாள்வதன் மூலம், இதை வேண்டுமென்றே பெரிய பிரச்சினையாக்கி, தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கில், தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது.
உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுக்குப் பிறகும், ஆட்சியில் இருக்கும் திமுக-வை மகிழ்விக்கவோ என்னவோ, சில அதிகாரிகளும் இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது.
இத்தகைய செயல்கள், கடும் கண்டணத்திற்குரியது, மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.