830 பேருக்கு வேலை... ஸ்ரீபெரும்புதூர் அருகே கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை திறப்பு!
கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் திறந்து வைத்தது தொடர்பாக...
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.1003 கோடி முதலீட்டில் 830 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் இன்று (டிச. 5) பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவியுள்ள உற்பத்தி தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் (Bharat Innovative Glass Technologies Private Limited BIG TECH) நிறுவனம், ரூ.1003 கோடி முதலீட்டில் 840 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவியுள்ள மின்னணு சாதனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ”17 மாதங்களில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது, கடந்தாண்டு ஜனவரியில் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டுவந்ததற்கு இந்த நிறுவனம் சாட்சி” என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! - இந்திய ரிசர்வ் வங்கி