முகப்பு
தமிழ்நாடு

பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த சேகர் காலமானார்!

கேமரா ஹவுஸ் சேகர் காலமானார்....

Updated On : 12 டிசம்பர் 2025, 10:44 am IST
கேமரா ஹவுஸ் சேகர்
பகிர்:

சென்னையில் தினமும் பல ஆயிரம் கிளிகளுக்கு உணவளித்து வந்த சேகர் உடல்நலக்குறைவால் காலமானார்.

பறவை மனிதர் என இந்தியளவில் கவனிக்கப்பட்டவர் ஜோசஃப் சேகர். சென்னை ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் பணியைச் செய்து வந்தபோது தன் அலுவலக மாடிப்பகுதியில் (அவர் வீடு) ஒன்றிரண்டு கிளிகளுக்கு உணவளித்து வந்தவரைத் தேடி கடந்த 20 ஆண்டுகளாக பல்லாயிரம் கிளிகள் வரத்தொடங்கியது.

கேமராக்களை சேகரிக்கும் பழக்கமும் இருந்ததால் இவரை மேமரா ஹவுஸ் சேகர் என்றே அழைத்து வந்தனர். ஆனால், நாளடைவில் ஆயிரக்கணக்கான கிளிகள் உணவுக்காக அவரைத் தேடி வந்தபோது, ‘பறவை மனிதர்’ (bird man) என அழைக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

உலகளவில் பல முன்னணி சுற்றுச்சூழல் பத்திரிகைகள், நிறுவனங்கள் கிளிகள் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூடுவதைக் கண்டு ஆச்சரியமடைந்து சேகரை நேர்காணலும் செய்திருக்கின்றன.

கிளிகளுக்கு உணவு வைக்கும்போது.

வாடகை வீட்டில் வசித்து வந்ததால் கட்டட உரிமையாளர் சேகரிடம் வீட்டை காலி செய்யச் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த வீட்டைவிட்டுச் சென்றால், கிளிகளுக்கு உணவளிக்க முடியாது என்பதால் தன் கேமரா சேமிப்புகளை மொத்தமாக விற்பனை செய்து அதனால் வரும் பணத்தில் கட்டடத்தை வாங்கலாம் என்கிற திட்டத்திலும் இருந்தார். ஆனால், அது நடக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே இப்பிரச்னையால் நிறைய விஷயங்களை இழந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். வீட்டை காலி செய்தபின் கடந்த 2 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளிக்க முடியாத வருத்ததையும் பதிவு செய்தார்.

இந்த நிலையில், தமிழகத்தின் பறவை மனிதரான சேகர் நேற்று (டிச. 11) இரவு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு பறவை ஆர்வலர்கள், ஒளிப்பதிவு துறையினர் உள்பட பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.