நமது நிருபர்
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.
அதேவேளையில், இந்த விவகாரத்தை உடனடியாக அவசரம் கருதி விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிபதிகள் அமர்வு நிராகரித்தது.
இதுதொடர்பாக ஜோ ஜோசப் என்பவர் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், அண்மையில் வழக்குரைஞர் மேத்யூஸ் ஜெ.நெடும்பாரா என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேரளத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் தரப்பில், பருவமழைக் காலம் விரைவில் வரவுள்ளதால் இந்த விவகாரத்தை அவசரம் கருதி விசாரிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் நீண்ட காலத்துக்கு நிலுவையில் இருந்தால், அணை உடைப்பு ஏற்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றும், அணையின் ஆயுள்காலம் 50 ஆண்டுகள் என்பதால் அணைக்குக் கீழ்ப்பகுதியில் 15 லட்சம் மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அவசர கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தை ஏற்கெனவே இது தொடர்பாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ள சம்பந்தப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க அனுமதி அளித்தது.
அப்போது, நீதிபதி ஹ்ரிஷிகேஷ் ராய் கருத்து தெரிவிக்கையில், "முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதிலிருந்து எத்தனையோ பருவமழை கடந்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழும் மாநிலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். அந்த அணை அமைந்து 130 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் ஆயுளைவிட இரண்டரை மடங்கு அதிகமாக நீடித்துள்ளது. அந்த அணை உடைந்துவிடுமோ என அச்சப்படுவது காமிக்ஸ் கதைபோன்று உள்ளது. நானும் அந்த மாநிலத்தில் இருந்திருக்கிறேன். எனது சகோதர நீதிபதியும் (எஸ்.வி.என். பாட்டீ) 4.5 ஆண்டுகள் அங்குதான் இருந்தார்' என்றார்.
நீதிபதிகள் ஹ்ரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டீ இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளனர். நீதிபதி ஹ்ரிஷிகேஷ் ராய் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.