முகப்பு
தமிழ்நாடு

தைரியமாக இருங்கள்; அதிமுக துணை நிற்கும்! - அஜித்குமார் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்!

அஜித்குமார் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Updated On : 2 ஜூலை, 2025 at 10:26 AM
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியுள்ளார்.

அஜித்குமாரின் தாயுடன் இபிஎஸ் பேசுகையில், "சில மனித மிருகங்கள் தாக்கியதால் அஜித்குமார் இறந்துவிட்டார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். இது மீளமுடியாத துயரம். தாய், தனது மகனை இழப்பது கொடுமையான விஷயம். இது யாராலும் மன்னிக்க முடியாதது. பெற்ற தாய்க்குதான் அந்த வலி தெரியும். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது. நீதிமன்றத்திலும் அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். மனம் தளராமல் இருங்கள், கண்டிப்பாக நீதி கிடைக்கும், நாங்கள் இருக்கிறோம். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசியுள்ளார்.

அஜித்குமாரின் தம்பி நவீன் குமாரிடம் இபிஎஸ் பேசுகையில், "அஜித் குமார் மரணத்திற்கு தண்டனை கிடைக்கும்வரை அதிமுக உங்களுடன் துணை நிற்கும். நீதிமன்றத்தின் மூலமாக நீதி நிலைநாட்டப்படும்" என்று தெரிவித்தார்.

அஜித்குமார் மரணம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல்துறையினர் தாக்கப்பட்டதால் பலியானார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மானாமதுரை ஏடிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அஜித் குமாரின் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று போனில் பேசிய நிலையில், அஜித் குமாரின் தம்பி நவீன் குமாருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has spoken over the phone to the family of the Ajith Kumar, who died during the police investigation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.