முகப்பு
தமிழ்நாடு

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதி செய்யும் பாஜக: முதல்வர்

தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து...

Updated On : 4 ஜூன், 2025 at 8:16 PM
முதல்வர் ஸ்டாலின் - கோப்புப்படம்.
பகிர்:

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பணி பிரதேசங்களான ஹிமாசல், உத்தரகண்ட் மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடய எக்ஸ் தளப் பதிவில், ”2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.

தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். தில்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! மத்திய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 2027-ல் மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.