முகப்பு
தமிழ்நாடு

தீர்ப்புக்குப் பிறகும் ஆளுநர் மாறவில்லை; மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை: முதல்வர் பேச்சு

தஞ்சாவூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு...

Updated On : 16 ஜூன், 2025 at 1:57 PM
தஞ்சாவூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் - DIPR
பகிர்:

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் ஆளுநர் ஆர்.என். ரவி மாறவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர் வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். தஞ்சை மாவட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் மசோதாவுக்கு இன்றுவரை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. நாங்கள் அனுப்பிய அன்றைக்கே அவர் ஒப்புதல் தந்திருந்தால் இந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டியிருக்கலாம். கடந்த மே 2 ஆம் தேதி அனுப்பிய நிலையில் 40 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை.

Advertisement

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் ரவி மாறுவார் என நினைத்தோம். ஆனால் அவர் இன்னும் மாறவில்லை. இந்த மசோதா தொடர்பாக பலமுறை ஆளுநருக்கு நினைவூட்டப்பட்டது. உயர்கல்வித் துறை அமைச்சரை ஆளுநரை சந்திக்குமாறு அறிவுறுத்தினோம். ஆளுநர் சந்திக்க மறுக்கிறார்.

சந்திக்க நேரம் கொடுத்தால் மசோதா குறித்து கேட்பார்கள் என பயந்து உயர்கல்வித் துறை அமைச்சருக்கு நேரம் தராமல் இழுத்தடிக்கிறார். ஆளுநருக்கு இதைவிட என்ன முக்கியமான வேலை இருக்க முடியும்? ஆளுநர் ஒருபக்கம் என்றால் மத்திய அரசு ஒருபக்கம் நிதி தராமல் இழுத்தடிக்கிறது" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.