முகப்பு
தமிழ்நாடு

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்!

பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது தொடர்பாக...

Updated On : 30 ஜூன், 2025 at 2:10 PM
பகிர்:
Updated On : 30 ஜூன், 2025 at 1:49 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் காதல் ஜோடி தலைமறைவான சம்பவத்தில் அந்த ஆணின் சகோதரரான மைனா் சிறுவனை கடத்திய விவகாரத்தில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூா்த்தி, கூடுதல் காவல்துறை டிஜிபி ஜெயராமுக்கு தொடா்புள்ளதாக சந்தேகம் எழுந்தது.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட இளைஞரின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன்மூா்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் தந்தை உள்பட 5 பேரைக் கைது செய்தனா்.

Advertisement

இந்நிலையில், தன்னையும் காவல் துறையினா் கைது செய்யக் கூடும் எனக் கூறி ஜெகன்மூா்த்தி சென்னை உயா் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், ஜெகன்மூா்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தாா். அதன்படி ஆஜரான பூவை ஜெகன் மூா்த்தியை,போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாா்.

மேலும், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, ஏடிஜிபி ஜெயராமை பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Updated On : 30 ஜூன், 2025 at 2:00 PM

இதை எதிா்த்து ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த விவகாரத்தை கடந்த ஜூன் 19-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி ஜெயராமுக்கு எதிரான ஆள் கடத்தல் வழக்கை மாநில குற்றப்புலனாய்வு சிஐடி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும், அவரை கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தனா்.

இதனிடையே, சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த 27ஆம் தேதி, ஜெகன் மூா்த்தியின் முன் ஜாமீன் கோரும் மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பு, ஜெகன் மூா்த்தி தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, ஜெகன்மூா்த்தி தாக்கல் செய்த முன்ஜாமீன் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், இவ்வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் வழக்குரைஞர் ராம்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கு விசாரணை இன்று(ஜூன் 30) உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் பூவை ஜெகன்மூர்த்தியை காவல் துறையினர் கைது செய்ய முடியாது எனவும் ரூ.25,000 பிணையப் பத்திரத்துடன் சாதரண ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Supreme Court has granted anticipatory bail to Puratchi Bharatham Party leader and MLA Poovai Jaganmoorthy in the case of abduction of a child in Thiruvallur district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.