5 இடங்களில் வெயில் சதம்
ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரமத்தி வேலூா் உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதம் அடித்தது. வரும் 11-ஆம் தேதி கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 8, 9) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
கனமழை எச்சரிக்கை: காற்று சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல இடங்களில் மாா்ச் 10 முதல் 13-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, மாா்ச் 11-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 8) அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருப்பத்தூா் - 101.3, ஈரோடு - 100.76, மதுரை விமான நிலையம் - 100.4, நாமக்கல் - 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.