திருத்தணி அருகே அரசுப் பேருந்து - லாரி மோதி விபத்து: 4 பேர் பலி
திருத்தணி அருகே அரசுப் பேருந்து - லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
திருத்தணி: திருவள்ளூர் அடுத்த திருத்தணி அருகே, அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகை பெட்ரோல் பங்க் அருகே ஆர்.கே. பேட்டை அடுத்த அம்மையார் குப்பம் பகுதியில் இருந்து அரசுப் பேருந்து தடம் எண் டி48 என்ற பேருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திருத்தணி நோக்கி மாலை 3.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திருத்தணியில் இருந்து ஆர்.கே. பேட்டை நோக்கிச் சென்ற டிப்பர் லாரி, அரசுப் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து முழுவதும் சேதமடைந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர்.
மேலும் பேருந்துக்குள் சிக்கிய பயணிகளை 2 ஜேசிபி மூலம் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு வெளியே மீட்டனர்.
இவர்களில், இருபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துளள்னர். இவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தும், கை, கால்கள் இழந்தும், உயிருக்கு ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருத்தணி தாசில்தார் மலர்விழி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலைப் பணி நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது. அங்கிருக்கும் கல்குவாரியிலிருந்து அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியானதாகவும், 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.