முகப்பு
தமிழ்நாடு

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்

Updated On : 4 நவம்பர், 2025 at 6:14 AM
முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

சென்னை: கோவை விமான நிலையம் அருகே, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர உத்தரவிட்டிருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவையில் தனியார் கல்லூரி முதுகலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், மூன்று பேர் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வந்த 21 வயது பெண், தன்னுடைய ஆண் நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், விமான நிலையத்தின் பின்புறம் குடியிருப்புகள் இல்லாத பகுதியில் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 3 பேர், அவர்களை மிரட்டி இளைஞரை தாக்கிவிட்டு, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூவர் காவல்துறையினால் தற்போது சுட்டுப் பிடிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், காவல்துறையினரை வலியுறுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister Stalin has ordered the police to ensure maximum punishment for the perpetrators of the Coimbatore gang rape.

முழு கட்டுரையைப் படிக்க →