கரூர் பலிக்கு காரணமான விஜய் மனிதாபிமானம் மிக்கவர், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவங்களா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் உள்ள இல்லத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். அப்போது, கோடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் அஞ்சமாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, அவருடைய நிலைமையை அவர் தெரிவிக்கிறார். ஆனால் சட்டம் என்ன சொல்கிறதோ அதை தமிழக அரசு செய்யும் என்றார்.
உச்சபட்ச அதிகாரம் மயக்கத்தில் மனிதாபிமானம் மாண்பு இல்லாமல் சட்டப்பேரவையில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் முதல்வர் என்று முதல்வரை கடுமையாக தாக்கி தவெக தலைவர் விஜய் பேசியுள்ளது குறித்து கேட்டதற்கு, கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்று நேரில் பார்க்காமல், ஆறுதல் சொல்லாமல் இருந்த அவர் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவரா? என்றார்.
2026 தேர்தலில் திமுகவின் நாள்கள் எண்ணப்பட்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் பாவம் நல்ல மனிதர், அங்கு சொல்லிக் கொடுப்பதை சொல்லிவிடுவார் அவ்வளவுதான்.
தில்லிக்குச் சென்ற செங்கோட்டையன் நான் யாரையும் சென்று சந்திக்கவில்லை என்று அன்று கூறினார், அதன் பிறகு கட்சியை விட்டு நீக்கிய உடன் பாஜக தன்னை அழைத்து பேசினார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு,
அதிமுக கட்சி விவகாரம். செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்தில் இருந்து இருப்பவர்தான். ஏன் இப்படி முடிவெடுத்தார் என்று அவருக்குத்தான் தெரியும். உண்மை வெளிவந்து விட்டது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.