திமுக ஆட்சியை எதிர்த்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்: நிர்மலா சீதாராமன்
கோவையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சு..
வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை எதிர்த்து கேள்வி கேட்கும் திறமையை மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கோவையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீராமன் உரையாற்றினார். அவர் நிகழ்த்திய உரையில்,
கோவைதான் தமிழ்நாட்டுக்கு அதிக வருவாய் கொடுக்கிறது. கோவைக்குதான் மத்திய அரசு அதிக நிதியும் ஒதுக்கீடு செய்கின்றது. மத்திய அரசின் திட்டங்களில் மாநிலங்களுக்கு எந்த பாகுபாடும் இல்லை. தமிழ்நாட்டில் வன்மத்துடன் திமுக ஆட்சி நடத்தி வருகிறது. தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி தரவில்லை எனப் பொய் பரப்புரையைச் செய்கின்றனர்.
பாஜகவினர் கிரமங்களுக்குச் சென்று மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். இங்கு வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை, கேள்வி கேட்கும் திறமையை மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்துக்குக் கிடைக்கவிடாமல் செய்யும் திராவிடக் கட்சி திமுகதான்.
பிரதமர் அறிவிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றுகிறார்கள். பிரதமர் மோடிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என அவரது திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். ஜல்லிக்கட்டை நிறுத்தியது காங்கிரஸ், அதற்கு திமுக ஒத்துழைத்தது. ஜல்லிக்கட்டு தமிழக கலாசாரம் என அதை திரும்பக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி.
பிம் ஸ்ரீ திட்டம் தேவை எனக் கேரள அரசு கேட்கிறது. ஆனால் இங்குக் கல்வி என்றாலே எதற்கெடுத்தாலும் போராட்டம். நீட் மூலமாக ஏழைகள் படிக்கிறார்கள். அதைக் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட்டை தூக்கி எறிவோம் என்றார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்களும் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
எஸ்ஐஆர் பற்றி நிர்மலா சீதாராமன் விளக்கம்
தீபாவளிக்குப் பிறகு ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்குப் பலன் அளித்துள்ளது. 2000-க்கு முன்பு 10 முறையும், அதற்குப் பிறகு 3 முறையும் என 13 முறை எஸ்ஐஆர் நடந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் எஸ்ஐஆர்க்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 முறை எஸ்ஐஆர் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் பிரச்னை இல்லையா? ஒவ்வொன்றாகக் குறை கூறியவர்கள், இப்போது எஸ்ஐஆர் தவறு எனக் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் எஸ்ஐஆர் செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. எஸ்ஐஆர் வழக்குகளை விரைந்து விசாரணைக்கு எடுக்குமாறு தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்துவரும் தேர்தலில் தோல்வி உறுதி எனத் தெரிந்தால், ராகுல் காந்தி வாக்குத் திருட்டு எனப் பேச ஆரம்பித்துவிட்டார். நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது நடந்த எஸ்ஐஆர் தவறாகத் தெரியவில்லை. ஆட்சியின் தவறுகளை மறைக்க, மக்களை ஏமாற்றும் முயற்சி இது. இவ்வாறு அவர் பேசினார்.