முழுநேர டிஜிபி கூட இல்லாத காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்? என்று தமிழக அரசை அதிமுக விமர்சித்துள்ளது.
கோவையில் இளம் பெண்ணை மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த டிஎஸ்பி மகன் கைது மற்றும் சென்னை டிஜிபி அலுவலகம் அருகே வழிப்பறி செய்த சம்பவங்களை குறிப்பிட்டு, தமிழக காவல்துறையையும் முதல்வரையும் அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
”சென்னையில் உள்ள காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்தின் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதே போல, கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் காவல்துறை டி.எஸ்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் அருகேயே துணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டியிருப்பது, பொம்மை முதல்வர் காவல்துறையை எந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்கிறார் என்பதற்கு சாட்சி!
முழுநேர டி.ஜி.பி. கூட இல்லாத ஒரு காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?
வேலியே பயிரை மேய்ந்தாற்போல், போக்சோ வழக்கு முதல் கொள்ளை வரை காவல்துறையினர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரே குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுகிறது.
காரணம்? இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாத வெற்று பொம்மை முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின்.
தொலைந்த இரும்புக்கரத்தை நீங்கள் இனிமேல் கண்டுபிடித்து, துரு நீக்கி..... எந்தப் பயனும் இல்லை!
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசை 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீட்டுக்கு அனுப்பி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.