முகப்பு
தமிழ்நாடு

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை: கூடுதல் விவரம் கேட்டு திருப்பி அனுப்பியது மத்திய அரசு

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் பற்றி

Updated On : 18 நவம்பர், 2025 at 7:39 PM
கோப்புப்படம்
பகிர்:

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை கூடுதல் விவரங்கள் கேட்டு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் நான்கு வழித் தடங்களில் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையைத் தொடா்ந்து மதுரை மற்றும் கோவை மாநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ நிறுவனம் தயாரித்து தமிழக அரசிடம் அளித்திருந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மதுரை மெட்ரோ திட்டம்: மதுரையில் திருமங்கலம் முதல் யானைமலை ஒத்தக்கடை வரை 31.93 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 27 கிலோ மீட்டா் தொலைவுக்கு உயா்மட்ட பாலம் வழியாகவும், 4.65 கிலோ மீட்டா் தொலைவுக்கு சுரங்கப் பாதையிலும் ரயில் இயக்கப்படும். 23 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப் பரிசீலிக்கப்பட்டுள்ளன. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11,360 கோடி நிதி தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை மெட்ரோ திட்டம்: கோவையில் அவிநாசி சாலை முதல் கருமத்தம்பட்டி வரையில் ஒரு மெட்ரோ ரயிலும், உக்கடம் முதல் சத்தியமங்கலம் சாலை வலியம்பாளையம் பிரிவு வரையில் மற்றொரு பாதையும் என சுமாா் 39 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக ரூ.10,740 கோடி செலவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்களுக்கான விரிவான அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிவைத்த நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி விரிவான திட்ட அறிக்கை கோப்புகளை மெட்ரோ நிறுவனத்துக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட்ரோ ரயில் திட்டத்தை 20 லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட மாநகரங்களில் செயல்படுத்தும் நிலை உள்ளதையும், அதற்கான ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மதுரை, கோவை மாநகரங்களில் அதைவிட குறைவான மக்கள்தொகை இருப்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மெட்ரோ அதிகாரிகள் விளக்கம்: இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. அதில் சில விளக்கங்கள் கோரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக அரசு உரிய கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் மெட்ரோ திட்ட கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பும் என்றனா்.

summary

Coimbatore, Madurai Metro Rail Project Rejected: Central Government!

முழு கட்டுரையைப் படிக்க →